நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் முக்கிய மற்றும் முதல் நிகழ்வான 136-ஆவது குதிரை பந்தயம் இன்று தொடங்கியது.
நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் கோடை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர். அப்படி வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு கோடை காலத்தை முன்னிட்டு முதல் நிகழ்ச்சியாக, 136 ஆவது ஆண்டு குதிரை பந்தயம் உதகையில் இன்று தொடங்கியது. இந்தப் பந்தயங்கள் வருகிற மே மாதம் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 17 குதிரை பந்தயங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் நீலகிரி டர்பி கோப்பைக்கான பந்தயம் ஏப்ரல் 15 ஆம் தேதி அன்றும், நீலகிரி தங்க கோப்பைக்கான பந்தயம் மே 21 ஆம் தேதி அன்றும் நடைபெறும் என ரேஸ் கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கென சென்னை, பெங்களூரு, ஐதிராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 550 பந்தய குதிரைகள் வருகை தந்துள்ளன. இதற்காக 24 பயிற்சியாளர்களும் 37 ஜாக்கிகளும் வந்துள்ளனர்.
முதல் நாள் குதிரை பந்தயம் என்பதால் பல பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் குவிந்தனர்.
தாம்பரமத்தில் கிழக்கும் மேற்கும் இணைய மேம்பாலம் – வெளிவந்த தகவல்..