தமிழக அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இன்று மாலை ஐந்து மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தோர் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று மாலை ஐந்து மணி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மேலும், சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை புதன்கிழமை இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து ஜூலை 01ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. முறையான வழிகாட்டுதல் இன்றி நடைபெறும் தற்காலிக ஆசிரியர் பனி நியமனம் பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை குறிப்பிட்டிருந்தது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியதன் அடிப்படையில், சில திருத்தங்களை மேற்கொண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டு நெறிமுறையினை ஜூலை 2ம் தேதி வெளியிட்டது.
இந்த புதிய வழிகாட்டு நெறிமுறையின் படி, தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் ஜூலை 4ம் தேதி முதல் 6ம் தேதி மாலை ஐந்து மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தது.
புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டு தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்தாலும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் இடைக்காலத் தடை நீக்கப்படாமலே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நாளை (ஜூலை 07) நடைபெற உள்ளது.