அரசுப்பள்ளிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் உத்தரவுக்கு தற்போது தடை போடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் இருக்கும் 13,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வினை நடத்தி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க தாமதமாகும் என்பதால், தற்காலிகமாக ஆசிரியர்களை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்தது.
இதன்படி தமிழகமெங்கும் அரசுப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய சென்ற வாரம் பள்ளிக்கல்வித் துறையானது உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த பணி நியமனமானது ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பினை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் வலுத்து வந்தன. தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கலாம் என பலரும் தெரிவித்திருந்தனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு 7,500 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய், முதுகலை ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி நிர்வாகக்குழுவினர் தாங்கள் விரும்புபவர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம் என்று கல்வித்துறைக்கு புகார்கள் வந்துகொண்டேயிருந்ததை அடுத்து தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தினை நிறுத்த வேண்டுமென்று திண்டுக்கல் மாவட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபோல பல்வேறு மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். தற்காலிக பனி நியமனத்தினை நிறுத்துமாறு வெளிவந்துள்ள இந்த உத்தரவானது தற்போது பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது.