தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும் பிரின்ஸ் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவரும் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா (79). இவர் திரையுலகில் முதன் முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 1965 ஆம் ஆண்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். பிறகு தனது 69-வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் கிருஷ்ணா பல மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்ப்பெற்றவர் ஆவார். நடிகர் கிருஷ்ணாவுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு. நடிகர் கிருஷ்ணா நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பன்முக திறமைகளைக் கொண்டவர். மேலும் இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவருக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மிக மோசமான நிலைமையில் இருந்ததால் வென்டிலேட்டரும் பொருத்தப்பட்டது. மேலும் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு மருத்துவர்களின் கண்காணிப்பிலும் இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி காலமான நிலையில், தற்போது இவரும் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும், திரையுலகினரையும், ரசிகர்களையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: உலகை மயக்கிய சாக்லேட் இந்த உலகிற்கு வந்த கதை ! அவை குறித்த ரகசியங்கள் ஒரு பார்வை