பெங்களூரில் பட்டம் விட சென்ற 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கியதில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தாசப்பா கார்டனில் வசித்து வந்த சிறுவன்தான், அபுபக்கர் சித்திக் கான். இவருக்கு வயது 13. கங்கா நகரில் உள்ள பள்ளி ஒன்றில் இவர் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 16-ஆம் தேதி அன்று தாசப்பா கார்டனுக்கு அருகில் உள்ள விஷ்வேஷ்வரய்யா பூங்காவில் பட்டம் விட்டுக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு குடியிருப்பு கட்டடத்தின் வழியாகச் சென்ற உயர் அழுத்தக் கம்பியில் பட்டம் விழுந்துள்ளது.
இதனால், அபுபக்கர் உடனடியாக இரும்பு வேலியின் மீது பட்டத்தை உயர் அழுத்தக் கம்பியில் இருந்து எடுக்க முயன்றபோது, அவர் மீது கம்பி பட்டதில் மின்சாரம் தாக்கியது. இதையடுத்து, அபுபக்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். 80 சதவிகித தீக்காயம் ஏற்பட்ட அபுபக்கர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, சிறுவனின் தாய் சுல்தானா சித்திக் அளித்த புகாரின் அடிப்படையில், கர்நாடகா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட், புருஹத் பெங்களூரு மாநகர பலைக் மற்றும் பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் சில அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவன் அபுபக்கர் உயிரிழந்தச் சம்பவம் பெங்களூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரில் தீ விபத்து… வழக்குப் பதிந்த காவல்துறை