பீகார் வங்கியில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்களை இரு பெண் காவலர்கள் ஓட ஓட விரட்டிய சம்பவத்தின் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம் ஹாஜிபூரில் பீகார் கிராமின் வங்கி இயங்கி வருகிறது. எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு வரும் இந்த வங்கியில் சாந்தி குமாரி மற்றும் ஜூஹி குமாரி என்ற இரு பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், அங்கு அப்போது இருசக்கர வாகனகங்களில் வந்து 4 பேர் இறங்கினர். அதில் இரண்டு பேர் வங்கிக்கு வெளியே நிற்க, மற்ற 2 பேர் மட்டும் முகமூடி அணிந்தபடி வங்கிக்குள் நுழைந்தனர்.
முகமூடி அணிந்தபடி வந்ததால் சந்தேகமடைந்த 2 பெண் காவலர்களும் முகமூடியை கழற்றி அவர்கள் வங்கி பாஸ்புக்கை காட்டுமாறு தெரிவித்தனர். இதற்கு பதில் அளிக்காத அந்த 2 நபர்களும் திடீரென சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை நீட்டினர். இதைக்கண்டு சிறிதும் அச்சம் கொள்ளாத பெண் காவலர்கள் அந்த நபர்களை தாக்கினர்.
மேலும் துப்பாக்கிகளை கொண்டு அடித்து அவர்களை ஓட ஓட விரட்டினர். பெண் காவலர்களிடம் அடி வாங்கிய கொள்ளையர்கள், இருசக்கர வாகனங்களை கூட எடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்தச் சம்பவம் வங்கியின் சிசிடிவி கேமராவில் காணொளியாக பதிவாகி இருக்கிறது. இந்தக் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டதை தொடர்ந்து வைரலாக பரவி வருகிறது. மேலும் இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணீஷ், அந்த வங்கியை ஆய்வு செய்தார். மேலும் பெண் காவலர்கள் இருவருக்கும் இந்தச் செயலுக்காக பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படத்தில் புஷ்பா வில்லன்.. வெளிவந்த அப்டேட்!