சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் குழுவினருடன் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 2009-ஆம் ஆண்டில் ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது.
இந்த முரண்பாட்டை களையக்கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், குடும்பத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்றாவது நாளாக தொடர்ந்தபடி இருக்கும் இப்போராட்டத்தில், 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்குமாறு தமிழக அரசுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் குழுவினருடன் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால், ஆசிரியர்களின் போராட்டமானது தொடர்ந்து வருகிறது.
3 கோடி பயணிகளின் விவரங்கள் ஹேக்; மறுத்த ரயில்வே..