நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவுகிறது.
இதன் காரணமாக வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து 20 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும் 21 ஆம் தேதி மேலும் புயலாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்காளதேசம் கடலோர பகுதியில் 22 ஆம் தேதி நிலைபெறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வின் காரணமாய், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதாலும், அதே பகுதியில் நாளை சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதாலும் மேற்சொன்ன பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
21 ஆம் தேதி அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் மியான்மர் கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு அந்தமான் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், வட கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றத்துடன் காணப்படும்.
இதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.