முன்னாள் அதிமுக ஊரகத்துறை வளர்ச்சி அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் விசாரணையில் சந்தேகம் உள்ள 58 இடங்களில் சோதனை செய்து வருகின்றனர் கையூட்டு ஒழிப்பு காவல்துறை.
ஏற்கனவே சென்ற ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளார் என்ற புகார்கள் வந்ததையொட்டி ஆகஸ்ட் மாதம் நடந்த சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் வேலுமணிக்குச் சொந்தமான மற்றும் அவரின் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் சோதனை போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை ஆறு மணி முதல் மீண்டும் இந்த சோதனையை தொடங்கி உள்ளனர் கையூட்டு ஒழிப்பு காவல் துறையினர்.
ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது பணியாற்றி வரும் ஊரகத் துறை வளர்ச்சி அரசு அதிகாரிகளின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் கோவை மாவட்டத்தில் மட்டும் 41 இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. வேலுமணியின் வீடு இருக்கும் கோவை மைல்கல் பகுதியில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீ மகா கணபதி ஜுவல்லரி நகைக்கடையிலும் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர் கையூட்டு ஒழிப்பு காவல் துறையினர். இதனால் பல்வேறு ஆவணங்கள் மற்றும் அதிகாரிகள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.