ஆகச்சிறந்த கலைஞர் என்று பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டவர்களுள் ஒருவர்தான், வைகைப்புயல் வடிவேலு. நகைச்சுவை நடிகராக நம்மை சிரிக்க வைத்ததோடு பல திரைப்படங்களில் அவரின் நடிப்பால் நம்மை அழவும் செய்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே நடிக்க தடை என திரையுலகம் அவரை இழந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
நம்மை அறியாமலே நம்மிடத்திலும், நாம் பயணப்படும் இடங்களிலோ, நாம் அரட்டை அடிக்கும்போதோ என ஏதோ ஒரு நிகழ்வில், நம்மின் அன்றாட செயல்களில், வடிவேலு அவர்களின் பாவனையோ, வசனமோ இயல்பாக வந்துவிடும். இதுதான் வடிவேலு எனும் கலைஞனின் வெற்றி. இப்படியாக தினசரி நம்முடன் பயணப்படும் வடிவேலு அவர்கள் தற்போது இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பிரபல நாய் சேகர் கதாப்பாத்திரத்தின் மூலமாக வடிவேலு அவர்கள் கதாநாயகனாக திரையுலகிற்கு திரும்புகிறார். சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படக்குழு மைசூரில் நடைபெற்ற இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியுள்ளனர். பலருக்கும் பிடித்த கதாப்பாத்திரமான நாய் சேகர் மூலம் திரைக்கு வடிவேலு அவர்கள் வருவதை காண பெரும்பான்மையான ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். தனது வெகுஜன நகைச்சுவைகளால் ரசிகர்களை வடிவேலு அவர்கள் கவரப்போகிறார் என்பது உறுதி!
வடிவேலு அவர்கள் நகைச்சுவையைத் தாண்டி எமொஷனலாகவும் நன்றாக நடிக்க கூடியவர் என்பதை பலரும் அறிவர். அந்த நடிப்புக்கு தீனிப்போடும் வகையில் உருவாக இருக்கும் திரைப்படம்தான், மாமன்னன்! ஆம், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் வடிவேலு அவர்கள் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படியான பட்டாளத்துடன்தான் வடிவேலு திரைக்கு வரவிருக்கிறார்.
மாரி செல்வராஜ் அவர்கள் இதற்கு முன்பு இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்திலும் சரி, கர்ணன் திரைப்படத்திலும் சரி பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் ஆழத்தை கொண்டதாகவே இருந்தன. அப்படியான ஒரு ஆழமான கதாப்பாத்திரத்தில்தான் வடிவேலு அவர்கள் இம்முறை நடிக்க இருக்கிறார் என்று நம்பப்படுகிறது.
எப்படியாக இருந்தாலும் நகைச்சுவையிலும், நடிப்பிலும் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் நம்மை கவர வருவதும் மீண்டும் உச்சம் பெறுவதும் உறுதியாயிற்று!