திமுகவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிகாரி ஒருவரை சாதி பெயரைச் சொல்லி திட்டிய வழக்கில் அவருடைய பதவி பறிக்கப்பட்டு, வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முதுகுளத்தூர் எம்.எல்.ஏ மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் ராஜ.கண்ணப்பன். இவர் சர்ச்சைகளில் சிக்குவது புதிதல்ல. ஆனால், இந்த முறை அதிகாரி ஒருவரை சாதி பெயரை சொல்லி திட்டிய விவகாரத்தில் சிக்கியுள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.
இந்த குற்றச்சாட்டை அளித்தவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆவார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சந்தித்து பேச முடியாத நிலையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை சாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும், மரியாதை குறைவான வார்த்தைகளால் கடுமையாக பேசியதாகவும் அமைச்சர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், நீ எஸ்சி தானே என்று நான்கு முறை திருப்பி திருப்பி கூறி என்னை மிகவும் மட்டம் தட்டி பேசினார். இதனால் நான் மிகவும் மனமுடைந்து உள்ளேன். என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இதனை மேலும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் புகார் அளிக்க வந்துள்ளேன் என்று கூறியுள்ளார் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன்.
இந்த பிரச்சினை உள்ளூர் வட்டாரங்களில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை திமுகவின் எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து கடுமையாக திமுகவை சாடி வருகின்றன.
சமூகநீதி கட்சி என்று கூறிக்கொண்டு வரும் திமுக தன்னுடைய அமைச்சர்களுக்கு சமூகநீதியை போதிக்கவில்லையா என்று குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், அமைச்சர் தரப்பில் இருந்து இதற்கு எவ்வித விளக்கமும் தரப்படவில்லை.
இதற்கு முன்னதாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் நாள் அமைச்சர் ராஜகண்ணப்பனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க சென்றிருந்தார். அப்பொழுது வெளியான புகைப்படமும் சர்ச்சையை கிளப்பியது.
அந்த புகைப்படத்தில் திருமாவளவன் பழைய பிளாஸ்டிக் சேரிலும், அமைச்சர் சோபாவிலும் அமர்ந்து இருப்பது போல இருக்கும். அமைச்சர் சாதியின் அடிப்படையில் தான் அவ்வாறு செய்தார் என்று கூறப்பட்டது. அதனை மறுத்த விடுதலை சிறுத்தை கட்சியினர் திருமாவளவன் தான் விரும்பி அமர்ந்தேன் என்று கூறியதால் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
சமீபத்தில் அமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை போக்குவரத்துத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூபாய் 35 லட்சம் கைப்பற்றப்பட்டது. பதவி உயர்வு வாங்கித் தருவதாக கூறி 3 முதல் 5 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது.
இந்நிலையில் இந்த பிரச்சினையும் சேர்ந்து எழுந்துள்ள நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.