தொடர்ந்து விண்ணை பார்த்து மட்டுமே வியக்கும் மனிதன், நிலத்தில் பார்த்து வியக்கும் விடயங்கள் மிக சொற்பமே. அந்தச் சொற்பங்களில் இருக்கும் மிகவும் அற்புதமான ஒன்றுதான், கடல்! உலகெங்கிலும் உள்ள பல மக்களும் காண விரும்பும் அற்புதங்களில் கடல் முக்கியமானது.
நம் தமிழகத்திற்கு கிடைத்த மிக பெரிய வரம், நம் கடல்களை கொண்ட மாநிலம் என்பதுதான். பல அண்டை மாநிலத்தவர்கள் இன்றளவும் “உங்களுக்கு என்னப்பா கடல்லாம் இருக்கு, ஜாலியா போய் பார்ப்பிங்கனு” சொல்வதை நம்மால் அவ்வபோது கேட்க முடியும்.
தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு புதியதாய், சுற்றுலாவுக்காக வரும் பலரும் முதலில் காண வேண்டும் என சொல்வது கடலைத்தான், குறிப்பாக மெரினாவைத்தான். கடல் பார்க்கும் மனிதர்களின் உணர்வுகள், கடல் அலைகளைப்போலவே எழுவதை நம்மால் அவர்களின் கண்களில் பார்க்க முடியும். கடலை காணுதல் என்பது அமைதியையும், உணர்ச்சிப்பெருக்கையும், மகிழ்வையும், ஆறுதலையும் தரவல்லது.
இப்படியான கடலை பாரக்க முடியாத பலர் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் கடல் பார்க்கும் ஆசை, கடல் நீர் காலில் பட்டுவிட வேண்டுமென்ற ஆசை எப்போது நிறைவேறும் என்ற ஏக்கத்தை தங்களுக்குள் வைத்தபடியே அவர்கள் உலவிக்கொண்டிருக்கின்றனர்.
கடல் இல்லாத இடத்தில் இருப்பவர்கள், கடலை காண முடியவில்லையெனில் கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் கடல் ஆர்ப்பரிக்கும் நகரத்தில் இருக்கும் ஒருவர் கடலை பாரக்க முடியாத நிலை என்பது எவ்வளவு கொடூரமானது. மிகவும் பிடித்த உணவுகள் கண் முன்னே இருந்தும் அதை ருசிக்காமல் இருப்பது எவ்வளவு சங்கடமானது. இப்படியான சங்கடங்களை சுமந்துகொண்டுதான் பல மாற்றுத்திறனாளிகள், கடல் கொண்ட நகரங்களில் வாழ்கின்றனர்.
நம் சென்னையின் மெரினாவை பொறுத்தவரை, சாலையில் இருந்து, கடல் தொலைவில் இருக்கும். மணல் பரப்பை நடந்து கடந்த பின்புதான் கடலிடம் செல்ல முடியும். இந்த மணல் பரப்பை கடப்பதென்பது மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் பொதிந்ததாகவே இருக்கும். மாற்றுத்திறனாளிகள் உபயோகிக்கும் வாகனம் இந்த மணல் பரப்பில் சிக்கிக்கொள்ளும் ஆதலால் அவர்கள் கடலுக்கு அருகில் செல்வது எல்லா சமயங்களிலும் நிறைவேறி விடாது.
இந்தச் சிக்கலை, சங்கடத்தை போக்க அரசு ஒரு திட்டத்தை மெரினாவில் தொடங்கியது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் எளிதில் கடலுக்கு அருகில் செல்ல முடியும். அத்திட்டம் என்னவென்றால், சாலைக்கும் கடலுக்கும் இடையேயுள்ள மணல்பரப்பில், மாற்றுத்திறனாளிகள் செல்லுவதற்கு ஏற்பட குறிபிட்ட இடத்தில் பாதை அமைப்பது.
இந்தத் திட்டமானது, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, இதற்காக சுமார் ரூ.1.14 கோடி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பணிகள் முழுவதும் முடியடைந்து நவம்பர் 27-11-2022 அன்று இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாதையானது, முழுக்க முழுக்க மரக்கட்டைகளால் வடிமைக்கப்பட்டு, மழைநீர் வடிந்து போகும் வகையில், கைப்பிடிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைப் பாதையானது, 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது. மெரினாவில் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு இன்னும் பல கடற்கரைகளுக்கு சென்று சேரவேண்டும். விரைவில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கால்களை நினைக்கும்படியான வசதியையும் பெறவேண்டும்.
தற்போது, மெரினாவில் மாற்றுத்திறனாளிகளும் கடலருகில் சிரமமின்றி செல்லலாம். கடல் காற்றை உணரலாம்.