சென்னை தீவுத்திடலில் பீப் பிரியாணி அரங்கு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் உணவுத்திருவிழா தொடங்கியுள்ளது. இந்த உணவுத் திருவிழாவானது நேற்று,இன்று, மற்றும் நாளை தேதிகளில் நடைபெறும். ‘சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022’ என்ற பெயரில் இந்த உணவுத் திருவிழா நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த உணவுத் திருவிழாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் பீப் பிரியாணி அரங்கு ஏன் அமைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, நானும் பீப் பிரியாணி சாப்பிடுபவன்தான். ஆனால், இங்கு அரங்கு அமைப்பதற்கு யாரும் அனுமதி கோரவில்லை என்பதால் பீப் பிரியாணிக்கென தனி அரங்கம் அமைக்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை உள்ளடக்கியது.
இந்நிலையில், சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், சென்னை உணவு திருவிழாவில் 3 பீப் பிரியாணி கடைகளை அமைக்க சம்பந்தப்பட்டவர்கள் அனுமதி கேட்டனர். இன்று மாலை உணவு திருவிழாவுக்கு சென்று பீப் பிரியாணி விற்பனையை பார்வையிடவுள்ளேன் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.