ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு எதிராக திருமாவளவன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது, திருமாவளவன் தரப்பு வக்கீல் இந்த ஊர்வலத்தினால் மத நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் என வாதிட்டார். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மறு ஆய்வு கோரினார்.
இதைத்தொடர்ந்து, திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இளந்திரையன் அளித்தார். அதில், கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியாது என்று கூறி திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.
இதையும் படிங்க: இரும்பு கழிவுகளை விற்பனை செய்ததன் மூலம் 2500 கோடி சம்பாதித்த இந்திய ரயில்வே