அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள நாட்காட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாட்காட்டி வெளியிடப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியில் இடம்பெறும் ஓவியத்திற்கான போட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஓவிய போட்டியில் உலக அளவில் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மேலும் அவர்கள் வித்தியாசமான ஓவியங்களை வரைந்தனர்.
இந்தப் போட்டியில் திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் தித்திகா என்ற மாணவியும் பங்கேற்றார். இதையடுத்து மாணவி தித்திகா வரைந்த ஓவியம் 2022-2023 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
ஓவியம் வரைந்து நாசாவின் நாட்காட்டியில் இடம்பிடித்த மாணவி தித்திகாவுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் ஓவியங்கள் தொடர்ந்து 4-வது முறையாக நாசாவின் நாட்காட்டியில் இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.