மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று முதல் மாற்றியமைக்கப்பட்ட புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. இருந்தும் மின்கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே ரூ.1.75 லட்சம் கோடி கடனில் தத்தளித்து கொண்டிருக்கும் மின் வாரிய துறையை அதிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்று அதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார் .
இதனைத்தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணத்தை அமல்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழக அரசு தரப்பில் மனு சமர்பிக்கப்பட்டது. பின்னர் மின் கட்டண உயர்வினால் வீட்டு வாடகை, கடை வாடகை, சிறுகுறு தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்டறியப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மாற்றி அமைக்கப்பட்ட புதிய மின் கட்டண உயர்வு குறித்து மின் வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 2026-27 ஆம் ஆண்டு வரை இந்த புதிய கட்டண உயர்வு அமலில் இருக்கும் என்றும், 8 ஆண்டுகளுக்கு பிறகே, தமிழகத்தில் இந்த மின் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரித்துள்ளார் .
அதேபோல் புதிதாக அமலுக்கு வந்துள்ள மின் கட்டண உயர்வில், மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் ,தமிழகத்தில் 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக கட்டணம் கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேபோல் மாதம் 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கான கட்டணம் ரூ.72.50-ஆகவும், 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.147.50 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு ரூ.297.50 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
மேலும் வணிக நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155ம், 700 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.275ம், 800 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு.395ம், 900 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.565ம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதுமட்டுமல்லாமல் வணிக மின் நுகர்வோருக்கு மாதம் ரூ.50 மின் கட்டணம் உயர்ந்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.
அதேபோல் விசைத்தறிகளுக்கான 750 யூனிட் இலவச மின்சாரத் திட்டமும் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த உயர்வு அமலுக்கு வந்திருந்தாலும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.