திமுக எம்.எல்.ஏக்கள் தன்னுடன் பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி பொய் பிரச்சாரம் செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை பாண்டி கோயில் சுற்றுச்சாலையில், கலைஞர் திடல் உள்ளது. அங்கு வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
விழாவில் கலந்துக்கொண்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இதனை திருமண விழா என்றில்லாமல் மண்டல மாநாடு என குறிப்பிட்டிருந்தால் பொறுத்தமாக இருந்திருக்கும். அமைச்சர் மூர்த்தி பொதுக்கூட்டம், அரசு நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் மிகப் பிரமாண்டமாக தான் செய்வார். தனி முத்திரை பதிப்பார். பிரமாண்டத்தை பதிப்பார். அதனால், மகனின் திருமணம் கட்சிக்கு பயன்பட வேண்டும். கட்சியின், ஆட்சியின் சாதனை மக்களுக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திருமணத்தை நடத்தியுள்ளார்.
ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வகையில் செயல்பட கூடியவர் பி.மூர்த்தி. அமைச்சரவை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது மூர்த்திக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக முடிவெடுத்தோம். அப்போது படிக்காதவர், கோபக்காரர் எப்படி அமைச்சர் பதவி வழங்குவது என யோசித்து அச்சத்தோடு தான் வணிகவரித்துறையை கொடுத்தோம். அச்சப்பட்டோம் ஆனால், பொறுமையின் சிகரமாக மாறி சிறப்பாக செயல்படுகிறார். இப்போது நிதிச்சுமை உள்ளது.
தற்போது வணிக பதிவுத்துறை வரலாற்றில் 13,913 கோடியில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பத்திர பதிவு அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை, திங்கள் தோறும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. சார் பதிவாளர் அலுலவலகங்களில் மாற்றுதிறனாளிகளுக்கான வசதி, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அலுவலகங்களில் இருந்து வந்த உயர மேடை நீக்கியது, நமது திராவிட மாடல் ஆட்சியில்தான்.
போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்காக சட்ட திருத்தத்துக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே இது போன்ற சாதனை செய்யப்பட்டுள்ளதால் மற்ற மாநிலங்கள் இது குறித்து கேட்கின்றனர். ‘மூர்த்தி பெருசா கீர்த்தி பெருசா’ என கேள்வி எழுப்பினால், எனக்கு கீர்த்திலாம் தெரியாது ஆனால், எனக்கு மூர்த்தி தான் பெரியதாக தெரிகிறார்.
இப்படி தனது அமைச்சர் குறித்து பெருமையாக பேசிய முதல்வர் ஸ்டாலின், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது கட்சி காரர்கள் 10 பேர் தொடர்பில் இருப்பதாக பேசிய எடப்பாடிக்கும் அந்த நிகழ்ச்சியில் நகைச்சுவையாக பதிலளித்திருந்தார்.
அதில், ‘அவர் கட்சிக்காரர்களே அவருடன் பேசுவதில்லை, அந்த கட்சி ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என பிளவுபட்டுக் கிடக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலில் படு தோல்வி என தொடர்ந்து தோல்விகளை மட்டுமே அந்த கட்சி சந்தித்து வருகிறது. இதில், அவரது கட்சிக்காரர்களே அவருடன் பேசாத போது திமுக எம்.எல்.ஏக்கள் தன்னோடு பேசுவதாக புரூடா விட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது அவர் வகிப்பதே டெம்பரவரி பதவி. அதுவே உறுதியாகாதபோது திமுகவை பற்றி விமர்சிப்பது கேளிக்கையாக உள்ளது.
மக்களுக்கும் நாங்கள் அளித்த வாக்குறுதியை பல்வேறு கடன் சுமைகளுக்கு நடுவிலும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம் .அதேபோல் எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் எங்கள் பணி இருக்கும் என கூறியதுபோல அவற்றையும் செய்து காட்டி வருகிறோம் . மக்களுக்கு நம் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இனி எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
நான் நிகழ்ச்சிக்கு செல்லும் போது இருமருங்கிலும் பொதுமக்கள் உற்சாகமாக என்னை வரவேற்கின்றனர். மனு அளித்தால் அவை பரிசீலிக்கப்பட்டு ,உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையோடு மனுக்களை தருகிறார்கள்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்களில் 100 நாட்களில் 75% மனுக்களுக்கு தீர்வு எட்டியுள்ளோம். நான் செல்லும் போது யார் மனு வைத்திருந்தாலும் வாங்குவேன். மாற்றுத்திறனாளிகள் என்றால் நானே நேரில் சென்று வாங்குவேன். சில நேரங்களில் என்னிடம் அவர்கள் உடல் நலத்தை பார்த்துகொள்ளுங்கள் என்று பாசத்தோடு கூறுவார்கள் .
மதுரையில் மாபெரும் கலைஞர் நூலகம் 75 சதவீத பணி நிறைவு பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு மைதான பணி, கீழடி பண்பாட்டு அரங்கம், பெருநகராட்சி குழுமம், சுற்றுவட்ட சாலை, மீனாட்சியம்மன் கோவில் கார் பார்க்கிங், தமுக்க மாநாட்டு மையம், பாதாள சாக்கடை அமைப்பு பணி, என அனைத்து பணிகளையும் ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து அனைவரும் ஓயாமல் மக்கள் பணி ஆற்றி வருகிறோம்.
AM , PM பாக்காத சிஎம் என சுவர் ஒட்டி (Poster) ஒட்டியிருந்தனர். MM CM ஆக இருக்க வேண்டும் மினிட் டூ மினிட் சிம் (Minute to Minute CM) ஆக இருக்க ஆசை.அதனால் தான் தமிழ்நாடு நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என பாடுபடுகிறோம்.’
இவ்வாறு, அவர் விழாவில் பேசியுள்ளார்.