பேரறிவாளன் விடுதலையானதை அடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சியினர் நாளை ஒரு மணி நேரம் அறப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாய் அக்கட்சியின் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கு காரணமாக பேரறிவாளன் உட்பட ஏழு பேருக்கு 1991ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 30 வருடங்கள் கழித்து இன்று பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து தமிழக காங்கிரஸ் அணியினர் நாளை வெள்ளைத் துணியினால் வாயினைக் கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் அறப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாய் அறிவித்துள்ளனர். நகரங்களின் முக்கிய பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடும் படியும் அவர் கூறியுள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான அந்த ஏழு பேர் தான் தமிழர்களா? மற்றவர்கள் தமிழர்கள் இல்லையா என்று கேள்வியினை எழுப்பியுள்ள கே.எஸ்.அழகிரி, 20 வருடங்களுக்கு மேலாய் சிறைவாசத்தினை அனுபவித்து வரும் மற்ற தமிழர்களின் நிலை என்ன அவர்களைக் கைப்பற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை விமர்சிக்க விரும்ப வில்லை என்று கூறியுள்ள அழகிரி, அந்த எழுவர் தான் ராஜிவ் காந்தி கொலைக்கு காரணமானவர்கள் என்றும், அவர்கள் நிரபராதிகள் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த விடுதலை புளித்துப் போன விடயமென்றும், இது பற்றி கருத்துக் கூற தாம் விரும்பவில்லை என்றும் காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளனின் விடுதலைப் பற்றி பல்வேறு தலைவர்களும், மக்களும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரறிவாளன் விடுதலையானதையொட்டி அவருக்கும் அவரது அன்னைக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பேரறிவாளனின் விடுதலை இந்திய அளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து ட்விட்டரில் பேரறிவாளன் என்ற ஹாஷ்டேக் பிரபலமாகி வருகிறது.
‘மகனுக்கு சுதந்திரத்தை பரிசளிக்க 30 வருடங்களுக்கும் மேலாய் போராடிய தாய்’ – பேரறிவாளன் விடுதலை!