டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக யுஏஇ அணிக்காக விளையாடும் சென்னை வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
முதல் சுற்றில் குழு ‘ஏ’ பிரிவில் நேற்று இலங்கையும் யுஏஇ அணிகள் மோதின. இதில், யுஏஇ அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்க வீரர் நிசாங்கா அதிரடி ஆட்டம் காட்டி, 60 பந்துகளில் 74 ரன்களை எடுத்தார். அதே சமயம் தனஞ்செய்யா சில்வா 33 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்ஆகி வெளியேறினார். அப்போது இலங்கை அணி 117 ரன்களுக்கு 3 விக்கெட் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
அப்போது ஆட்டத்தின் 15-வது ஓவரை யுஏஇ அணியில் விளையாடும் மெய்யப்பன் இலங்கை அணிக்கு பெரும் சவாலாக இருந்தார். இந்த ஓவரின் 4-வது ராஜபக்சாவின் விக்கெட்டை மெய்யப்பன் எடுத்தார். இதையடுத்து, அடுத்த பந்தில் அசலங்காவை டக் அவுட்டாக்கிய மெய்யப்பன், கடைசி பந்தில் இலங்கை கேப்டன் ஷனாகாவை போல்ட் ஆக்கினார்.
இதன் மூலம் 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஹாட்ரிக் விக்கெட் சாதனையை மெய்யப்பன் பதிவு செய்தார்.
முன்னதாக, டி20 உலக கோப்பையில் 5 ஹாட்ரிக் விக்கெட் சாதனைகள் நடந்துள்ளன. முதல் உலககோப்பையின் போது பிரட்லீ வங்கதேசத்துக்கு எதிராக நிகழ்த்தினார். இதன்பிறகு, அயர்லாந்து வீரர் கேம்பர் என்ற வீரர் நெதர்லாந்துக்கு எதிராகவும், ஹசரங்கா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும், ரபாடா இங்கிலாந்துக்கு எதிராகவும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த சாதனையை டி20 உலககோப்பையில் நிகழ்த்திய முதல் தமிழக வீரர் மெய்யப்பன் என்ற பெருமையை தற்போது இவர் பெற்றுள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் கார்த்திக் மெய்யப்பன்.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு துபாய்க்கு குடும்பத்துடன் சென்று தங்கி, அங்கு கிரிக்கெட் பயின்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு 19 வயத்துக்குட்பட்டவர்களுக்கான யுஏஇ அணியின் கேப்டனாக இருந்த மெய்யப்பன், அதே ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீயா நானா வாங்க பாக்கலாம்.. டெஸ்லா கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் ஓலா கார்கள்