தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை பவுலின் ஜெசிகாவின் காணாமல் போன, ஐபோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை பவுலின் ஜெசிகா என்ற தீபா இவருக்கு வயது 29. இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மல்லிகை அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். நடிகை ஜெசிகா பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், ‘வாய்தா’ திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர்.
இந்நிலையில், பவுலின் ஜெசிகா கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவர், எழுதியிருந்த கடிதத்தில், ‘நான் ஒருவரை காதலித்து வந்தேன், அந்தக் காதல் கைக்கூடவில்லை. இதனால் எனக்கு வாழ விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது இறப்புக்கு யாரும் காரணமில்லை’ என தெரிவித்துள்ளார். இதனைக் கைப்பற்றிய கோயம்பேடு காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவுலின் ஜெசிகாவின் காதலன் என்று கூறப்படும் தயாரிப்பாளர் சிராஜுதீன் மற்றும் அவரது நண்பர் பிரபாகரன் ஆகியோர் மீது சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பவுலின் குடியிருந்த பகுதியிலும் சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து சோதனை நடத்தி வருகின்றனர்.
தயாரிப்பாளர் சிராஜுதீனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதாகவும், இதனிடையே பவுலின் அவரிடம் காதலை வெளிப்படுத்தியதாகவும் அதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தனது சகோதரியின் இறப்பில் மர்மம் இருப்பதாக பவுலின் நடிகையின் சகோதரர் ராஜேஷ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை பவுலின் ஜெசிகாவின் காணாமல் போன ஐபோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பவுலின் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் போது, கதவை உடைத்து பார்த்த பிரபாகரன் என்ற நபரிடம் இருந்து ஐபோனை காவல்துறையினர் மீட்டனர். மேலும், மொத்தமாக நடிகை பவுலின் ஜெசிகா பயன்படுத்திய 3 கைப்பேசிகளும் ஒரு டேப் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் தடையங்கள் எதுவும் அழிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய தடையவியல் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.