கள்ளக்குறிச்சி வன்முறை காரணமாக 6-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களுக்கு சம்மன் அனுப்பி, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூலை 13-ம் தேதி கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்து போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த உயிரிழப்புத் தொடர்பாக போராட்டத்தின் போது வன்முறை உருவானது. இந்த வன்முறையின்போது, பள்ளி பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வன்முறைக்கு முக்கிய காரணமாக சமூகவலைதளங்களும், யூடியூபுகளும் சொல்லப்பட்டன. இதைத் தொடர்ந்து, கலவரத்தை தூண்டும் வகையிலான பதிவுகள், குறிப்பிட்ட ஒரு நபர் மீது உள்நோக்கத்தோடு கருத்துக்கள் மற்றும் வீடியோ வெளியிடுவது, வதந்திகளை பரப்புவது என மொத்தம் 36 யூடியூப் சேனல்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-த்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இது சம்பந்தமாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் 36-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.