ஆரிப் முகமது கான் முடியை தொட்டால் கூட கேரள அரசை கலைக்க வேண்டும் என்ற சுப்பிரமணியன் சுவாமி கருத்தால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் மாநில அரசுக்கும் இடையே மிக மோசமான மோதல் நீடித்து வருகிறது. அதே சமயம் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநரை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
இதனிடையே, கேரள நிதியமைச்சர் கே.என் பாலகோபாலை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்டோபர் 19 ஆம் தேதி திருவனந்தபுரம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில நிதியமைச்சர் பாலகோபால் பேசியது இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானது. பிராந்தியவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருக்கிறது.
பதவிப் பிரமாணம் செய்துவைத்த போது அவர் எடுத்த உறுதிமொழியை மீறுவதாக இது அமைந்துள்ளது. உறுதிமொழியை வேண்டுமென்றே மீறுபவர்கள் பதவியில் இருக்கத் தகுதியானவர்கள் அல்ல. எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை அவசியம் என்று ஆளுநர் ஆரிப் கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரையும், மத்திய அரசையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை கேரள கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். கேரள ஆளுநரின் ஒரு முடியை தொட்டால் கூட கேரள அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இந்தப்பதிவு தற்போது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “நீங்கள் அன்புக்காக எல்லாவற்றையும் செய்தீர்கள்”:அம்மா சோனியா குறித்து மகள் பகிர்ந்த உணர்ச்சிபூர்வமான பதிவு