சென்னை தீவுத்திடல் உணவுத் திருவிழாவில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் உணவு தயாரித்து உலக சாதனை.
தமிழகத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் உணவுத்திருவிழா தொடங்கியுள்ளது. இந்த உணவுத் திருவிழாவானது நேற்று ஆரம்பித்த நிலையில், இன்று நடைபெற்று வருகிறது, நாளையும் நடைபெற உள்ளது.
இந்த உணவு திருவிழாவானது ‘சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022’ என்ற பெயரில் இந்த உணவுத் திருவிழா நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவு வீணாகுவதை தடுக்க வேண்டிய வழிமுறைகள், எந்த வகை உணவுகளை சாப்பிடுவது நல்லது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை எடுத்துரைக்கவும் இந்த உணவுத் திருவிழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதோடில்லாமல், பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் ஆகியவை நடத்தப்படுகிறது. இந்த நிலையில், உணவுத்திருவிழாவின் 2-வது நாளான இன்று பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு வகைகள் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
குறிப்பாக நொறுக்குத்தீனிகளுக்கு பதிலாக சத்தான உணவுகளை தாமாகவே தயாரிக்கும் விதமாக அடுப்பில்லா சமையல் என்ற பெயரில் பல்வேறு உணவு வகைகளை தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் சத்துமாவு உருண்டை, சிறுதானிய உருண்டை, ப்ரூட் சாலட், மசாலா பயிறு உள்ளிட்ட 10 வகையான திண்பண்டங்களை மாணவர்களே தயார் செய்தனர். இதில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் உணவு தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.