வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவும் இந்த மண்டலம், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும். இதன் காரணமாக, வங்கக் கடலில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திர கடலோரம், மன்னார் வளைகுடா, தமிழக தென் கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
மேலும் கேரள, கர்நாடக அரபிக்கடல் பகுதிகளிலும், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். அதனால், மீனவர்கள் வருகிற செப்டம்பர் 14-ம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி, பந்தலுாரில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது. சின்னக்கல்லார், 7; அவலாஞ்சி, 5; சேலம், பெரியாறு, 1 செ.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் மலை பகுதிகளில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
இவ்வாறு, அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை; முந்துங்கள்…விண்ணப்பிக்க குறைவான நாட்களே உள்ளன