தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதினாலேயே அவர் காலில் விழுந்ததாக மாணவி அகிலாண்டேஸ்வரி விளக்கம் அளித்துள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சி வந்தவுடன் நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இதனால், அனிதா உட்பட பல மாணவ மாணவிகள் தங்கள் உயிரை இழந்தனர். இதனால், தமிழக அரசு நீட் விலக்கு மசோதாவுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கால தாமதம் ஆனதால், இந்த ஆண்டும் தமிழக மாணவர்கள் கடந்த ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வை எதிர்கொண்டனர். இந்தத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது.
நீட் தேர்வில் 104 மதிப்பெண்களைப் பெற்ற அகிலாண்டேஸ்வரி என்ற மாணவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் மருத்துவ படிப்புக்கு உதவி கேட்க சென்றார். அப்போது அண்ணாமலை மாணவியின் கல்வி செலவு முழுவதையும் ஏற்பதாக உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது.
பிறகு, செய்தியாளர் சந்திப்பின்போது மாணவி அகிலாண்டேஸ்வரி அவரின் காலில் விழுந்தார். மாணவியை அண்ணாமலை தூக்கி காலில் விழக்கூடாது என்றார். இதனிடையே, அண்ணாமலை காலில் மாணவி விழுவதற்கு முன்பு, மாணவியை பார்த்து பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி சைகை காட்டியுள்ளார்.
இந்தக் காணொளி சமூக ஊடங்களில் வெளியாகி பேசும் பொருளாக மாறியது. இதற்கு பலரும் விமர்சனங்களை குவித்து வந்தனர். இதையடுத்து மாணவி அகிலாண்டேஸ்வரி, அண்ணாமலையின் காலில் விழுந்ததற்கான விளக்கம் அளித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘கிராமத்தில் பிறந்த டீ கடைக்காரர் மகள் நான். நீட் தேர்வில் வெற்றி பெற்றத்தை பார்த்து பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை. சமூக வலைத்தளங்களில் என்னை கேலி செய்யாதீர்கள். அவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் தான், நான் அவர் காலில் விழுந்தேன். மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.
Well said dear 💪🏻💪🏻💪🏻💪🏻@annamalai_k @amarprasadreddy https://t.co/MoVx80M5vu
— Madhuvanthii (@YGMadhuvanthi) September 11, 2022