ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரி அமலாக்கதுறைக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன விற்பனையில் நடந்த சட்ட விரோத பண மோசடி குறித்து, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, கடந்த 3 ஆம் தேதி ஆஜராகக்கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், 13 ஆம் தேதி ஆஜராகக் கோரி, அவரது மகனும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
ஆனால், கொரோனா வைரஸ் தொற்றால் சோனியா காந்தி பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் விசாரணையை தள்ளி வைக்கும்படி கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து ஜூன்23 ஆஜராகும்படி சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. பின்னர், சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் சமீபத்தில் வீடு திரும்பினார்.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய சோனியா கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால், முழுமையாக குணமடையும் வரை, நேரில் ஆஜராவதற்கு விசாரணையை சிறிது நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு சோனியா கடிதம் எழுதியுள்ளார் என பதிவிட்டுள்ளார்.
மேலும் ராகுல்காந்தியிடம் கடந்த 13, 14, 15, 20 மற்றும் 21-ம் தேதிகளில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ராகுல் காந்தியிடம் மொத்தம் 60 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சற்று நேரத்தில் துவங்கப்போகும் அதிமுக பொதுக்குழு.. வாகன நெரிசலில் சென்னை சாலைகள்..!!