புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்து, ‘சமூக நீதி என்பது சலுகை அல்ல! அரசின் கடமை’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை இன்று (செம்டம்பர் 5) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த புதுமைப்பெண் திட்டத்துக்காக 698 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. முதல்கட்டமாக, ஒரு லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கான தொடக்க விழா இன்று சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
இத்திட்டத்தினை தொடங்கி வைத்து, தலைமை தாங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
புதுமைப் பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும். பாலின சமத்துவம் ஏற்படும், குழந்தை திருமணங்கள் குறையும். பெண்கள் அடங்கி போகத் தேவையில்லை. ரூபாய் 1000 இலவசமாக வழங்கப்படவில்லை அது அரசின் கடமை.
நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை கொண்ட பெண்களே.. கல்வியின் துணை கொண்டு உலகை வென்றிட துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன். நன்றாக படிக்கும் பெண்கள், திருமணத்திற்கு பின் வீட்டிற்குள் முடங்கும் சூழல் உள்ளது. இது மாற வேண்டும். தந்தைக்குரிய கடமை உணர்வுடன் பேசுகிறேன்.
மாணவர்களை வளர்த்தெடுக்கவே நானும், அரசும் உள்ளோம். கல்வி எனும் நீரோடை எந்த வேறுபாடுமின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவானதே நீதிக்கட்சி. நீதிக்கட்சியின் நீட்சியே திராவிட இயக்க ஆட்சி.
என் வாழ்வில் மகிழ்ச்சிக்குரிய மகத்தான நாள் இன்று. பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கற்றலோடு மாணவர்களின் பல்வேறு திறன்களையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக நீதி என்பது சலுகை அல்ல, அரசின் கடமை. பெண் கல்வி ஊக்குவிக்கப்படும் போது, சமத்துவம் நிலைக்கும்.
இவ்வாறு அவர், பேசியுள்ளார்.
#LIVE: புதுமைப்பெண், தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் திட்டங்களின் தொடக்க விழா https://t.co/ebqxNHHrNd
— M.K.Stalin (@mkstalin) September 5, 2022