குரூப் டி போட்டி தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேயில் உள்ள குரூப் டி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு வருகிற செப்டம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழக மாணவர்கள் பங்கேற்க உள்ள நிலையில், அவர்களுக்கு தேர்வு மையம் ஆந்திராவில் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு பாமக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் இன்று (செப்டம்பர் 5) தெரிவித்துள்ளதாவது:
இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8 ஆம் தேதி நடைபெறும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
தமிழக மாணவர்கள் ஆந்திர தேர்வு மையத்திற்கு செல்ல 700.கி.மீ.க்கும் கூடுதல் தொலைவு பயணிக்க வேண்டும். 36 மணி நேரம் முன்னதாக சென்று அறை எடுத்து தங்க வேண்டும். இது சாத்தியமல்ல.
700.கி.மீ.க்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையம் ஒதுக்குவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். தேர்வுக்கு தயாராவதில் தடையை ஏற்படுத்தும். மாணவர்களின் தேர்வு எழுதும் திறனை கெடுக்கும். இது கூடாது.
மாணவர்கள் இயல்பாக தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டியது ரயில்வே தேர்வு வாரியத்தின் கடமை. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.