இந்தியாவில் சமூக செயல்பட்டார்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது பஞ்சாப் மாநிலத்தின் நாட்டுப்புற பாடகர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் சித்து மூஸ்வாலா கடந்த மே 29-ம் தேதி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, சில அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த துப்பாக்கி சூட்டில் மேலும் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் .இந்த படுகொலையானது பஞ்சாப் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஏனெனில் அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு 24 மணி நேரத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். எந்த காரணத்திற்காக அவருக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது என்று பஞ்சாப் அரசு இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை 35 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . தற்போது இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள அணைத்து மாநிலங்களிலும் ,குறிப்பாக ஹரியானா போன்ற மாநிலங்களில் அதிரடி சோதனை மற்றும் விசாரணையை என்.ஐ.ஏ இன்று தொடங்கியுள்ளது .
மேலும் இந்த கொலை சம்பவத்தில் திகார் சிறையில் உள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்ணோய்க்கும் ,மேலும் பல தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்யப்படுவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர் .