கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளரை காவல்துறை ரகசிய விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளி விடுதி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை 17-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி உயிரிழப்புக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர், சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு இப்போராட்டம், பெரும் வன்முறையாக மாறியது.
இதைத் தொடர்ந்து, இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சமூகவலைதளத்தில் பத்திரிகையாளர் சாவித்திரிக் கண்ணன் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சென்னை சாஸ்திரி நகரில் வசித்து வந்த மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் (57) வீட்டிற்கு சீருடை அணியாத காவல் துறையினர் சென்று, அவரிடமிருந்து செல்போனை பறித்து, அவருடைய மனைவியின் செல்போனையும் வாங்குவதற்கு முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர், சாவித்திரி கண்ணனை சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்று அவர் மனைவியிடம் கூறிவிட்டு, விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூருக்கு அவரை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை காவல்துறை அழைத்துச்சென்ற செய்தி வேகமாக ஊடகங்களில் பரவியது. அதன் பிறகு பல்வேறு அமைப்புகளும், சில அரசியல் கட்சியினரும், இது தொடர்பாக அரசுக்கு கண்டனங்களை தெரிவித்து, விடுவிக்க வலியுறுத்தினர். இதன் பிறகு , சைபர் கிரைம் போலீஸாரின் விசாரணைக்குப் பின் நேற்று மாலை அவர் விடுவிக்கப்பட்டார்.
சாவித்திரி கண்ணன் நடத்திவரும் அறம் வலைதளப் பக்கத்தில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தபோது எழுதி வைத்த கடிதம் தொடர்பாக சிலவற்றை பதிவிட்டிருந்தார். அதுதொடர்பாக விசாரிக்கவே காவல்துறை அவரை அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதையும் படிங்க: நாட்டுப்புற பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு – என்.ஐ.ஏ அதிரடி சோதனை