சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை நேற்று (ஜூலை 31) நிலமோசடி வழக்கில் கைது செய்துள்ளது.
சிவசேனா எம்.பி.யான சஞ்சய் ராவத் நில மோசடி செய்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், மும்பை பாண்டூப்பில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டில் நேற்று (ஜூலை 31) காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், அவரது வீட்டிலேயே சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது சஞ்சய் ராவத் வீட்டில் இருந்து 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 31) மாலை 5 மணியளவில் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதன்பின்பு, அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்தும் சஞ்சய் ராவத்திடம் நிலமோசடி மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது.
இந்நிலையில், பல மணி நேர விசாரணைக்குப் பின் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, சஞ்சய் ராவத் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, சஞ்சய் ராவத் சகோதரர் சுனில் ராவத் கூறியதாவது :
எனது சகோதரர் உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கம் என்பதால் தான் அவரை கைது செய்திருக்கின்றனர். நிலமோசடியில் அவருக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. இந்த வழக்கு இல்லாவிட்டால் வேறு வழக்கில் கைது செய்திருப்பார்கள். பாஜக சஞ்சய் ராவத்தை கண்டு பயப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விரும்பினால் என்னை தூக்கிலிடலாம்- சர்ச்சை குறித்து ஆதிர் ரஞ்சன்