இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து சர்ச்சையான முறையில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க தயார் என மக்களவைக்கான காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என சர்ச்சையான முறையில் இன்று (ஜூலை 28) காலை பேசியதற்கு மன்னிப்பு கேட்க தயார் என மக்களவைக்கான காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மக்களவைக்கான காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் இன்று முழுவதும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மீண்டும் மதியம் 12 மணிக்கு மக்களவை தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியும், ஆதிர் ரஞ்சன் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மக்களவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது:
குடியரசுத் தலைவர் குறித்து ஆதிர் ரஞ்சன் கூறிய வார்த்தைகள், அந்த கட்சியினரின் மனநிலையை எடுத்துக்காட்டுகிறது. இந்தியா ஒருபோதும் பழங்குடியினரை அவமானப்படுத்துவதை பொறுத்துக் கொள்ளாது; இவ்வளவு நடந்த பிறகும், இதில் மன்னிப்பு கேட்க எதுவும் இல்லை என ஆதிர் ரஞ்சன் கூறியுள்ளார்.
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய மக்களவைக்கான காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் கூறியுள்ளதாவது:
குடியரசுத் தலைவரை அவமானப்படுத்த வேண்டும் என நான் நினைத்து கூட பார்க்க முடியாது. அந்த சம்பவம் தவறுதலாக நடந்துவிட்டது. குடியரசுத்தலைவர் இது குறித்து வருத்தப்பட்டால், நான் தனியாக நேரில் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்பேன், அவர்கள் விரும்பினால் என்னை தூக்கிலிடலாம். தண்டனையை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இந்த விவகாரத்தில் சோனியா காந்தியை ஏன் இழுக்க வேண்டும்?
இவ்வாறு ஆதிர் ரஞ்சன் தெரிவித்தார்.
என் உண்மையான பெயர் ‘திரௌபதி முர்மு’ இல்லை- குடியரசுத் தலைவர்