சென்னை: செப்டம்பர் 11 ஆம் நாள் ‘மகாகவி நாள்’ என்று கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு பாமக தலைவர் அன்புமணி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தன்னுடைய பாடல்கள் மூலம் மக்களுக்கு ஊக்கமும், புத்துணர்ச்சியும் அளித்தவரான மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு தினமான செப்டம்பர் 11 ஆம் தேதி இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனை வரவேற்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாசும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அவர்களது ட்விட்டர் பதிவுகளில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் பதினோராம் நாள் மகாகவி பாரதியார் நாளாக கடைபிடிக்கப்படும்; பாரதியாரின் படைப்புகளை மக்களிடமும் மாணவர்களிடமும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது நல்ல நடவடிக்கை. பாரதியாரை எல்லா நாளும் நினைவில் கொள்வோம்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று தேசத்திற்கும் தமிழுக்கும் வாழ்ந்த மகாகவியை அரசின் அறிவிப்புகளால் அங்கீகரித்துள்ளீர்கள். சுதந்திரப் போரின் எரிமலையாய் திகழ்ந்த வஉசி, பாரதி, இருவருக்கும் காலம் கடந்த அங்கீகாரம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.