சென்னை செளகார்பேட்டையில் நீண்ட நாட்களாக உரிமம் பெறாமல் இயங்கி வந்த 160 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் வருவாய் இழப்பை சரி கட்டவும், வருவாயை மேலும் உயர்த்தும் விதமாகவும் பல வழிகளிலும் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செளகார்பேட்டையில், கோவிந்தப்ப நாயக்கன் தெரு, குடோன் தெரு ஆகிய இடங்களில் தொழில் வரி செலுத்தாமலும், உரிமம் பெறாமலும் இயங்கி வந்த 160 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கடைகளை மூடி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி குறிப்பிட்ட கடைகளுக்கு ஏற்கனவே தொழில் வரி செலுத்த சொல்லி நோட்டீஸ் வழங்கிய பின்னரும் உரிய ஒத்துழைப்பு வழங்காமல் மெத்தனமாக இருந்ததே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்க காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சீல் வைக்கப்பட்டுள்ள கடைகள் அனைத்தும் நிலுவையில் இருக்கக்கூடிய தொழில் வரியை செலுத்தினால் மட்டுமே, மீண்டும் அவற்றிற்கான உரிமம் வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.