புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் டீ குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அண்ணனை தாக்கியவரை தட்டிகேட்ட தம்பி மீது அரிவாள் வெட்டு சம்பவம் நிகழ்த்தப்பட்டதில் தம்பியின் காது துண்டானது.இந்த நிகழ்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே பிள்ளையார்திட்டு நல்லவாடு ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். பாஜக பிரமுகரான இவர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரின் வீட்டின் அருகில் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி மற்றும் அவரது உறவினர் வினோத் ஆகியோர் சாலையின் நடுவில் நின்று டீ குடித்ததாக கூறப்படுகிறது. அவர்களை செல்வகுமார் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் தகாத வார்த்தைகளால் செல்வகுமாரை திட்டி தடியால் தாக்கியதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது தம்பி ஜெயக்குமார் ஓடிவந்து தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது வினோத் தனது வீட்டிற்கு சென்று கூர்மையான அரிவாளை எடுத்துவந்து ஜெயக்குமாரை வெட்ட முயன்றுள்ளார். இதில் ஜெயக்குமார் சற்று சுதாரித்துக்கொண்டு நகர்ந்துள்ளார். அப்போது அரிவாள் ஜெயக்குமாரின் காதை பதம் பார்த்தது. இதில் அவரின் இடது காது துண்டானது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் உதவி ஆய்வாளர் பிரபு வழக்குப் பதிவு செய்து வினோத்தை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய சின்னசாமியை தேடி வருகின்றனர்.