கேரள மாநிலத்தில் தவறான சிகிச்சையால் தங்களது மகனின் முழங்கை அகற்றப்பட்டு விட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி பகுதியைச் சேர்ந்த மாணவன் சுல்தான் சித்திக். நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, சுல்தான் சித்திக் கீழே விழுந்துள்ளார். இதனால், இடது கையில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடரந்து, சுல்தான் சித்திக்கை தலச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அப்போது மருத்துவமனையில் எலும்பு மருத்துவர்கள் இல்லாததால், பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் எலும்புகளை சேர்த்து வைத்து கட்டுப்போட்டு சிகிச்சையளித்துள்ளார்.
இதன்பிறகு, அடுத்த நாள் எலும்பு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சுல்தான் சித்திக்கிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கையில் வலி தொடர்ந்து இருந்தமையால், கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சுல்தான் சித்திக் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சை செய்த கையில் ரத்த ஓட்டம் இல்லாததால் கை அழுகிவிட்டதாக கோழிக்கோடு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், முழங்கை பகுதி வரை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மாணவன் சுல்தான் சித்திக்கிற்கு இடது முழங்கை வரை அகற்றப்பட்டது.
தலச்சேரி பொது மருத்துவமனையில் அளித்த ஒழுங்கற்ற சிகிச்சையே இதற்கு காரணம் என மாணவனின் பெற்றோர்கள் முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.