ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணத்தில் கலந்து கொண்டதற்காக ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் மத்திய பிரதேச மாநிலம் பரவாணி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ராகுல் காந்தியின் நடைபயணத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜேஷ் கன்னோஜ் என்ற ஆசிரியர் கலந்து கொண்டார். இந்தப்பள்ளி மத்திய பிரதேச அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே இவர், கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் தேதி ஆசிரியர் பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்தப் பணியிடை நீக்கம் தொடர்பான உத்தரவு சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் பள்ளி விதிமுறைகளை மீறி அரசியல் சம்பந்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டதன் காரணமாக ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆசிரியர் பேரணியில், கலந்து கொள்வதற்காக முக்கிய வேலை இருப்பதாகக் கூறி விடுப்பு எடுத்துள்ளார். பிறகு அவர், பேரணியில் கலந்துகொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.