கர்நாடகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் வெள்ளத்தைக் கடக்கும் காட்சிகள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கர்நாடாகாவின் தலைநகரான பெங்களூருவிலுள்ள மகாதேவபுரா, பொம்மனஹள்ளி பகுதிகளைச் சேர்ந்த யெமலூர், ரெயின்போ டிரைவ் லேஅவுட், சன்னிபுரூக்ஸ் லே அவுட் அதன் சுற்றுப்புறங்களில் மழைநீர் வெள்ளமாய் பெருக்கெடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்டவைகளில் பணிபுரிவோரில் ஒரு சிலர் டிராக்டர்கள், படகுகளை வரவழைத்து, அவற்றின் உதவியுடன் அலுவலகத்திற்கு சென்றனர். இந்த காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் எல்லாம் இணையதளத்தில் வைரலாகின.
அந்தவகையில், பாகல்கோட் மாவட்டத்தில் குலேடாகுட்டா பகுதியில் கனமழை காரணமாக பாலத்திற்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதில், பள்ளி செல்லவேண்டிய மாணவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் பாலத்தைக் கடந்து பள்ளிக்குச் சென்றனர். இது காணொலியாக எடுக்கப்பட்டு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.