இணைய சூதாட்டத்தால் பலர் உயிரிழந்து வரும் நிலையில், மக்களைக் காக்க தமிழக அரசுக்கு மனம் இல்லையா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இணைய சூதாட்டத்திற்கு பல நாட்களாக பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இணைய சூதாட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
சேலம் மாவட்டம் ஆத்தூர் சதாசிவபுரத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் சூரிய பிரகாஷ் இணைய சூதாட்டத்தில் ரூ.75 ஆயிரம் இழந்ததால் நஞ்சு குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் கல்லூரி கட்டணம் செலுத்த வைத்திருந்த பணத்தை சூதாடி இழந்திருக்கிறார் என்பதிலிருந்து இணைய சூதாட்டம் மாணவர்களையும் அடிமையாக்கியுள்ளதை அறியலாம்.
இணைய சூதாட்டத்துக்கு கடந்த ஓராண்டில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வளவுக்குப் பிறகும் இணைய சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படவில்லை என்றால், மக்களைக் காக்க அரசுக்கு மனம் இல்லையா என்ற வினா எழுகிறது.
இணைய சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து 90 நாள்களாகி விட்டன. அமைச்சரவையில் இரு முறை விவாதிக்கப்பட்டுவிட்டது. இனியும் தாமதிக்காமல் உடனடியாக அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும்
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.