அரக்கோணம் அருகே பள்ளி மாணவர்களை அழைத்து வர சென்ற பள்ளிப்பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம், ராணிப்பேட்டை அருகே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர பள்ளியில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை அப்பள்ளி பேருந்து சேத்தமங்கலத்தில் 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது திடீரென பேருந்தின் முன்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனை அறிந்த பேருந்து ஓட்டுநர், 4 மாணவர்களையும் உடனடியாக கீழே இறக்கிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதன்காரணமாக, அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.