இங்கிலாந்து நாட்டின் தேசிய கீதம், கரன்சி, பாஸ்போர்ட் உள்ளிட்டவை மாற உள்ளது.
இரண்டாம் எலிசபெத் கடந்த 1952-ம் ஆண்டு இங்கிலாந்து ராணியாக பதவியேற்றார். அன்றிலிருந்து கிட்டத்தட்ட 70 வருடங்களாக இங்கிலாந்து ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி இரவு காலமானார். இதைத் தொடர்ந்து, பட்டத்து இளவரசரான சார்லஸ் பிரிட்டனின் அடுத்த அரசரானார்.
இதனால், இங்கிலாந்து நாட்டின் தேசிய கீதம், கரன்சி, பாஸ்போர்ட் உள்ளிட்டவை மாற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்து ராணியாக பதவியேற்றதில் இருந்து, அந்த நாட்டின் தேசிய கீதத்தில் ‘‘காட் சேவ் தி குயின்’’ என்ற வரிகள் பாடப்பட்டது. தற்போது சார்லஸ் மன்னராகி இருப்பதால் ‘‘காட் சேவ் தி கிங்’’ என்று தேசிய கீதம் மாற்றப்படுகிறது.
மேலும், இங்கிலாந்தின் நாணயங்கள், கரன்சியில் (பவுண்ட்) தற்போது ராணி இரண்டாம் எலிசபெத்தின் படம் இடம்பெற்றிருக்கிறது. இனி தயாரிக்கப்படும் நாணயங்கள் மற்றும் கரன்சிகளில் அரசர் சார்லஸ் படம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது, பாஸ்போர்ட், அஞ்சல் தலை, அஞ்சல் பெட்டிகள் ஆகியவற்றிலும் சார்லஸை முன்னிறுத்தி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அரச பரம்பரையின் தனிக் கொடியும் மாற்றப்பட உள்ளது்
புதிய மன்னர் சார்லஸின் 2-வது மகன் ஹாரி அரச பரம்பரையில் இருந்து வெளியேறிவிட்டார். எனினும் ஹாரியின் குழந்தைகளுக்கு அரச பரம்பரை பதவிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.