திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி சட்டமன்ற தொகுதியில் சசிகலா நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது கட்சிக்காக ஆற்றிய பெருமைகளையும், ஜெயலலிதா தன்னலமற்ற முறையில் செய்த சேவை பணிகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சசிகலா தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து பேசி வருகிறார் .
அதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தனது ஆதரவாளர்களையும், பொது மக்களையும் சந்தித்து பேசினார்.
இதற்கு பிறகு கடந்த ஜூலை மாதம் திண்டிவனம், வானூர், உளுந்தூர் பேட்டை ஆகிய இடங்களிலும், சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் சசிகலா நாளை கும்மிடிப்பூண்டி தொகுதியில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் .
இதையும் படிங்க : வெறும் 4 முதல்வர்கள் மட்டும் இல்ல, அதுக்கும் மேல – எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
இதுகுறித்து அவரது முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண் இனத்தின் பாதுகாப்பை பேணி காத்திடவும் சசிகலா திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார். எம்.ஜி.ஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தொடர்ந்து பயணிக்க உள்ளார்.
நாளை (புதன்கிழமை) மதியம் 2.30 மணிக்கு சசிகலா தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்படுகிறார். கோயம்பேடு பாலம், மாதவரம் ரவுண்டானா, செங்குன்றம், பாடியநல்லூர் வழியாக கன்னிகைபேர் சென்றடைந்து அங்கிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.