சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்தவர் தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று வந்தது. இது குறித்து மும்பை காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில், இந்த மிரட்டல் கடிதத்தை லாரன்ஸ் பிஸ்னோய் தன்னுடைய கூட்டாளிகள் மூலம் அனுப்பியிருந்தார் என்பது தெரியவந்தது.
இந்த லாரன்ஸ் பிஸ்னோய், பஞ்சாப்பில் கடந்த மே 29-ம் தேதி பட்டப்பகலில் பாடகர் சித்து மூஸ்வாலா மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர்.
இந்நிலையில் சித்து மூஸ்வாலா படுகொலை தொடர்பாக நேபாளத்தில் முக்கியக் குற்றவாளி தீபக் முண்டி, கபில் பண்டிட், ராஜிந்தர் ஆகியோர் கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கபில் பண்டிட், நடிகர் சல்மான் கானை கொலை செய்ய ஒத்திகையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
ஏன் சல்மான் கானை கபில் பண்டிட் கொல்லப் பார்க்கிறார் என்ற கேள்விக்கு, நடிகர் சல்மான் கான் 1998-ம் ஆண்டு ராஜஸ்தானில் படப்பிடிப்புக்குச் சென்ற போது அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. சல்மான் கான் வேட்டையாடிய அபூர்வ வகை மான்களை பிஸ்னோய் இன மக்கள் புனிதமாகப் பார்க்கின்றனர். எனவேதான் லாரன்ஸ் பிஸ்னோயை ஒரு முறை ராஜஸ்தான் நீதிமன்ற விசாரணைக்குக் கொண்டு வந்திருந்தபோது `நடிகர் சல்மான் கானைக் கொலை செய்வேன்’ என்று நேரடியாக மிரட்டல் விடுத்திருந்தார்.
தற்போது அவரிடமிருந்து கடிதம் மூலமும் மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து சல்மான் கான் மும்பை காவல்துறையிடம் தனது பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். காவல்துறை அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து பாதுகாப்புக்குத் துப்பாக்கி வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு.. திடுக்கிட வைக்கும் புதிய ஆதாரம்!