ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள், இறந்துபோன முதியோர்களின் உடல்களை தடிமனான சுடு மண் பானைகளில் வைத்து, நிலத்தினுள் குழி தோண்டி புதைத்து வைத்துள்ளனர். இதனையே முதுமக்கள் தாழி என அழைக்கின்றோம்.
மக்கள் வாழ்வியல் கலாச்சாரத்தை சித்தரிக்கும் இந்த முதுமக்கள் தாழியில் இறந்து போன முதியோர்களின் உடல்கள் மட்டுமின்றி, இவர்கள் பயன்படுத்தி ஓரிரு பொருட்களையும் சேர்த்தும் புதைத்துள்ளனர். இந்த ஈமத்தாழி நினைவுச் சின்னங்களை சுற்றி, வட்ட வடிவில் கற்களை பதித்து வைத்துள்ளனர். இதனால், இந்த ஈமச்சின்னங்கள் கல் வட்டம் என வரலாற்று ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது.
பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொ ருட்களை கண்டுபிடித்து, பத்திரப்படுத்தி பாதுகாப்பாக வைத்து வருகின்றனர் தொல்லியல் துறையினர். இதைப்போலவே, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகேயுள்ள தும்பல் எனும் கிராமத்தில், முதுமக்கள் ஈமத்தாழி கல் வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல் வட்டங்களை பாதுகாக்க வேண்டுமென வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தொல்லியல் துறையினர் இங்கு ஆய்வு மேற்கொண்டனர். தும்பல் கிராமத்தில், ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கு வரலாற்றுச் சான்றாக, தும்பல்-கோட்டப்பட்டி பிரதான சாலைக்கு அருகாமையில் உள்ள தனியார் நிலத்தில் இன்றும் ஏராளமான கல் வட்டங்கள் காணப்படுகிறது.
கல்வராயன் மலை அடிவாரம் தும்பல் கிராமத்தில், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கல் வட்டங்கள் இருந்ததை, சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த குழுவினர் கடந்த 2016 ஆம் ஆண்டில் கண்டறிந்து ஆவணப்படுத்தினர்.
கல் வட்டங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி தனியார் நிலம் என்பதால், செங்கல் சூளைக்கு மண் எடுத்த போது பல கல் வட்டங்கள் சிதைக்கப்பட்டது. இப்போது, 5 கல் வட்டங்கள் மட்டும் தான் சிதையாமல் முழுமையாக காணப்படுகிறது. மீதமிருக்கும் கல் வட்டங்களையாவது சிதைந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். இதற்கு சேலம் மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டுமென, சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து, தும்பல் கிராமத்தில் காணப்படும் கல் வட்டங்கள் குறித்து, நேரடியாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க வேண்டுமென, தொல்லியல் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவின்படி தொல்லியல் துறையினர் தும்பல் கிராமத்திற்கு சென்று கல் வட்டங்களை ஆய்வு செய்து, படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்து சென்றனர்.
தும்பல் கல்வட்டங்கள் குறித்து, தமிழக அரசுக்கும் மத்திய தொல்லியல் துறைக்கும் விரிவான அறிக்கை அளிக்கப்படும். அதன்பின் மத்திய, மாநில அரசுகளின் முடிவுகளுக்கு ஏற்ப, கல் வட்டங்களை பாதுகாக்கவும், அகழாய்வு நடத்துவது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர். ஆய்வுக்கு ஏற்பாடு செய்த தமிழக அரசிற்கும், தொல்லியல் துறைக்கும் சேலம் வரலாற்று ஆய்வு மைய வரலாற்று ஆர்வலர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
குறி வச்சு அடிக்கும் ஏவுகணை; உக்ரைனுக்கு பரிசளித்த இங்கிலாந்து! – அடுத்த கட்டம் என்ன?