நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான சூர்யா மற்றும் ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்யுமாறு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெய் பீம் திரைப்படம், கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி இணையதள வழியில் வெளியாகியது. மேலும் பல விமர்சனங்களையும் போராட்டங்களையும் சந்தித்த நிலையில் மீண்டும் இப்படம் ஒரு வழக்கில் சிக்கியுள்ளது.
ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இந்தப் புகாரில், ஜெய் பீம் திரைப்படத்தில் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் விதமாகவும் மக்களிடையே சாதி மற்றும் மத கலவரங்களை தூண்டும் விதமாகவும், படம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், ஒரு சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாவும், மேலும் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக வசனங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரை சந்தோஷ் நாயகர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி வேளச்சேரி காவல் நிலையத்தில் அளித்திருந்தார். ஆனால், இந்த புகாரை வேளச்சேரி காவல் நிலையம் விசாரிக்காமல் அப்படியே வைத்திருந்ததால், சந்தோஷ் நாயகர் சென்னை சைதாப்பேட்டை நீதி மன்றத்தில், தனது புகாரின் மீது உரிய விசாரணை நடத்த வேண்டுமென்று மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், கலை இயக்குநர் தவமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், புகார் மீது வரும் ஐந்து நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், வருகின்ற மே 20 தேதியன்று முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி திடீர் மரணம்: உடற்கூறு ஆய்வில் சிக்கிய ஆதாரங்கள்!