இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி ‘இந்தியா, இந்தோனேஷியாவுக்கு துணை நிற்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், நகரின் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அத்துடன் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வானது இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்தா வரை உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்த நிலநடுக்கத்தால் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும், இடிபாடுகளில் சிக்கித் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மீட்பு பணியினரும், பொதுமக்களும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர்.
மேலும், இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 2000-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. 5300 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 13,000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி, ‘இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் – காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேஷியாவுக்கு இந்தியா துணை நிற்கும்’ என கூறியுள்ளார்.
கனமழை எச்சரிக்கை நீங்கி விட்டது: அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…