இன்றைய தேதி சச்சின் டெண்டுல்கருக்கு மட்டுமல்ல, அனைத்து சச்சின் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத நாள்தான். இன்றைய தேதியில் அப்படி என்னென்ன நடந்தது என்று கேள்வி எழும்புமாயின் அதற்கான பதிலை இப்பதிவில் காண்போம். 2004, 2012 என இருவேறு காலக்கட்டங்களில் சச்சின் செய்த சாதனைகள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக 2012 ஆம் ஆண்டு சச்சின் செய்த சாதனை என்பது எவராலும் மறக்க முடியாத ஒன்று. உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டினார், சச்சின் டெண்டுல்கர்!
99 சதங்களை அடித்திருந்த நிலையில் தனது நூறாவது சதத்திற்காக சச்சினும் அவரது ரசிகர்களும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. விழி மீது விழி வைத்து காத்திருந்தேன் என்பார்களே அப்படியாகத்தான் சச்சின் அவர்களின் நூறாவது சதத்திற்கு ரசிகர்கள் காத்திருந்தனர்.
அந்த காத்திருப்புக்கு பலன், 2012 ஆம் ஆண்டில் வங்காள தேச கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய ஒரு நாள் போட்டியில் கிடைத்தது. ஆம்! சச்சின் டெண்டுல்கர் சதம் அடிக்க, அச்சதத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது நூறாவது சதத்தை அவர் பதிவு செய்தார். இந்த சதத்தால் சச்சின் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனி நபர் நூறு சதங்கள் அடிப்பதென்பது இதுவே முதல்முறையாகும்.கிரிக்கெட் உலகம் கொண்டாடிய இந்த நூறாவது சதத்தை சச்சின் பூர்த்தி செய்த தேதி 2012 மார்ச் மாதம் பதினாறாம் தேதியாகும். இன்றைய தேதியில் பத்து வருடங்களுக்கு முன்பு சச்சின் செய்த இந்த சாதனைதான் தற்போது இணையத்தில் வைரல்!
மார்ச் மாதம் பதினாறாம் தேதியிலேயே சச்சின் மற்றுமொரு அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆம்! பாகிஸ்தானுக்கு எதிராக 2004 – ல் நடந்தேறிய ஒரு நாள் போட்டியில் 14 பவுண்டரிகளுடனும் ஒரு சிக்ஸருடனும் தனது 37 வது சதத்தை பூர்த்தி செய்தார், சச்சின் டெண்டுல்கர்!
பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற அந்த ஒரு நாள் போட்டியில் சச்சின் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை தனது பேட்டிங் திறமையால் கையாண்ட விதத்தை இப்போது பார்த்தாலும் வியப்புதான். இப்போட்டியில் சச்சின் விளையாண்ட விதம் குறித்தும் தற்போது இணையத்தில் பலரும் பேசி வருகின்றனர்.
ஒன்று மட்டும் தெளிவாய் தெரிகிறது, இந்நாள் சச்சின் டெண்டுல்கருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இனிய நாள்!