ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் எப்போது ஓயும் என்றே தெரியாத அளவுக்கு தற்போது போரானது நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவுகள் உலக நாடுகள் மத்தியில் அதிகம் கிடைத்தாலும் உதவுவதற்கு சில நாடுகள் மட்டுமே முன் வந்துள்ளன. உக்ரைன் பெரிதும் நம்பிய நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்யாமல் கைவிட்டுவிட்டன.
இப்படியான சூழலில் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய போர் விமானங்கள் தொடர் குண்டு மழையை பொழிந்து வருகின்றன. வான்வழித் தாக்குதல்களால் உக்ரைன் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிகழ்வை தடுக்கும் பொருட்டு உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி அவர்கள் உக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்க வேண்டுமென நேட்டோ நாடுகளை வலியுறுத்தினார்.
ஆனால், இதுவரையிலுமே உக்ரைன் அதிபரின் வலியுறுத்தலுக்கு நேட்டோ நாடுகளிடம் இருந்து எந்த வித பதிலும் வரவில்லை. வான்பரப்பை தடை செய்யவும் அவர்கள் தயாராக இல்லை. குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால், வான் பரப்பை தடை செய்தால் ரஷ்யாவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் இடையே நேரடி போர் ஏற்படும் என்ற அடிப்படையை காரணமாய் வைத்துக்கொண்டுதான் நேட்டோ நாடுகள் உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கவில்லை.
நேட்டோ நாடுகள் மேற்கூறிய படி செயல்பட, உக்ரைன் அதிபரோ, கடந்த ஆண்டு, ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான தடுப்பு தடைகள் இல்லை என்றால், அது ஒரு போரைத் தொடங்கும் என்று நேட்டோ தலைவர்களுக்கு நான் தெளிவான எச்சரிக்கை விடுத்தேன் என்றார். மேலும் ‘நீங்கள் எங்கள் வானத்தை மூடவில்லை என்றால், ரஷிய ஏவுகணைகள் உங்கள் பிரதேசத்தில் விழுவதற்கு சிறிது நேரமே ஆகும். நேட்டோ பிரதேசம், நேட்டோ நாடுகளின் குடிமக்களின் வீடுகளில் ரஷ்ய ஏவுகணைகள் பாயும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.
இப்படியாக உண்மைகளை தெரிவித்தும் நேட்டோ நாடுகளிடம் இருந்து உதவியோ, வான்வழி பரப்பை மூடுவது குறித்தோ இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.