இலங்கை அதிபர் ராஜபக்சே இரஷ்ய அதிபர் புதினிடம், எரிபொருள் இறக்குமதி செய்ய உதவி செய்யுமாறு தொலைபேசி வாயிலாக கோரியுள்ளார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதனால், இலங்கை பல்வேறு நாடுகளிடம் உதவிகேட்டு வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.
மேலும், இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்த உரையாடல் குறித்து இலங்கை அதிபர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :
“விளாதிமிர் புதினுடன் ஆக்கப்பூர்வ உரையாடல் தொலைபேசியின் வாயிலாக நடைபெற்றது. இந்த உரையாடலில் இதுவரை செய்த உதவிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். மேலும், தற்போதைய நெருக்கடியான சூழலைக் கடக்க எரிபொருள் இறக்குமதி செய்யவும் உதவி கோரியுள்ளேன்.
மேலும், மாஸ்கோ முதல் கொழும்பு வரையிலான விமானப் போக்குவரத்தை மீண்டும் துவக்குமாறு வேண்டுகொள் விடுத்துள்ளேன். சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் உரையாடினோம்” என்று தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இலங்கையில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.