இந்திய ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இந்திய ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கத்தில் ‘காளி’ எனும் ஆவணப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் ஜூலை மாதம் நடைபெற்ற ஆகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெறும் ‘ரிதம்ஸ் ஆஃப் கனடா’ என்ற கனடா திருவிழாவில் திரையிடப்பட்டது.
இந்த திரையீடலை அடுத்து, லீனா மணிமேகலை தனது காளி படத்தின் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அந்த போஸ்டரில், இந்துக்களின் கடவுளான காளி வேடத்துடன் ஒருவர் புகைப் பிடிப்பது போன்றும், ஒரு கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தியபடியும் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சித்தரிப்பானது மாபெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய தூதரகம் நேற்று ‘ரிதம்ஸ் ஆஃப் கனடா’ என்ற நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் காளி ஆவணப்படத்தை திரும்ப பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து அத்திரைப்படம் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும் இத்திரைப்படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை சில வழக்குகள் பதியப்பட்டன. இதன்பிறகு இத்திரைப்படம் சார்ந்தோ, லீனா மணிமேகலை சார்ந்தோ பெரிய பிரச்சினைகள் உருவெடுக்கவில்லை.
இந்நிலையில், தற்போது லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் ஒரு கடிதத்தின் வாயிலாக வந்துள்ளது. இதை லீனா மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அப்பதிவில் அவர், ஆர்.எஸ்.எஸ். கனடாவின் டொராண்டோ நகரில் இந்த கொலை மிரட்டல் கடிதத்தை பரப்பி வருகிறது. எடொபிகோக் பகுதியை சேர்ந்தவர் இதை எனக்கு அனுப்பி வைத்தார் என்று தெரிவித்துள்ளார்.
RSS is circulating this death threat in Toronto. Someone from Etobicoke has sent me this image @TorontoPolice pic.twitter.com/aIfH3IPm2R
— Leena Manimekalai (@LeenaManimekali) September 11, 2022
மேலும், ஆர்எஸ்எஸ் முத்திரையுடன் இருக்கும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
வெறுக்கத்தக்க நடவடிக்கைக்காக லீனா மணிமேகலையை தண்டிக்க வேண்டும். மேற்கத்திய ஈடுபட்டால் இந்துத்துவ கொள்கையை அவர் இழிவுபடுத்தியுள்ளார். அவரது தினசரி நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. ஆனால் அவர் இந்துஸ்தானில் சாதாரணமாக நடமாடுகிறார். மரணம் குறித்து பயமில்லாதவர்களின் நடவடிக்கைகளால் அவர்களின் குடும்பம் பின்விளைவுகளை சந்திக்கும்.
மேலும், மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் கொல்லப்பட்ட தேதியை குறிப்பிட்டு “இப்படிதான் இந்துத்துவாவினர் பிரச்சனைகளை அழித்தனர். இதுபோல் செய்ய பல வழிகள் உள்ளன. உணவு, குளிர்பானங்களில் விஷம் கலக்கலாம். லீனா மணிமேகலை திரைப்பட விழாக்கள் போன்ற பொது இடங்களுக்கு வருவார். இந்துஸ்தான் மீது அத்துமீறும் அமெரிக்கா, கனடா குடிமக்களை புனித பூமியில் இருந்து அகற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தஞ்சைக்கு அழைத்த விக்ரம்.. மறுத்த கார்த்தி – பொன்னியின் செல்வன் அலப்பறைகள்!